What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வர்ணஜாலம் : 9

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
4,814
Reaction score
2,184
Points
113
ஜாலம் 09

“என்னடி மச்சான்.. அப்போ நெஞ்சமாவே உனக்கு கண்ணாலம் தானா?” என்று வினவிய தோழியை முறைத்து தள்ளினாள் மீனாட்சி.

ஒன்றா இரண்டா நேற்றிலிருந்து விடாமல் நூறாவது முறையாக இதே கேள்வியை கேட்டுக்கொண்டு கூடவே சுற்றுபவளை வேறு என்னதான் செய்வது.

“ஹிஹி... கோச்சிக்காத மச்சி.. ஒரு கிளரிஃபிகேஷனுக்கு தான் கேட்டேன்...” என்ற ஸ்ருதி, மீனாட்சிக்கு தலையளங்காரத்தை முடிக்க, கௌரவ் விக்ரம் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“என்ன மச்சான் பொம்புள கெட்டப் போட்டிருக்க?” என்று மீனாட்சியின் தலையில் தட்டிய கௌரவ் வசதியாக விக்ரமின் பின் ஒளிந்துகொண்டான். அவனுக்கு விழ வேண்டிய அடி வழமை போல் பாவப்பட்ட விக்ரமின் வசமானது.

“என்னயவே எப்பவும் டெஸ்டிங் பீசா யூஸ் பண்ணுங்கடா?” என்றவன் தலையை தடவிக்கொண்டான்.

“உனக்கு நழுவுற சாமர்த்தியம் பத்தாது கண்ணா... வாட் கேன் வி டு?” என்று ஸ்ருதி சொல்ல அங்கு சிரிப்பொலி தான். விக்ரமும் சிரித்துவிட்டான்.

அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரேயா பாட்டியை கண்டுகொண்ட மீனாட்சி கௌரவிடம், “எங்கடா கெழவி?” என்றாள் வேண்டுமென்றே.

“அத ஏன் கேக்குற… இன்னைக்கு ஏதோ அதுக்கே கல்யாணங்கிற மாதிரி அம்புட்டு மினுகிட்டு வந்து மொத ஆளா உக்காந்திருக்கு...”

’சிக்குனாண்டா சேகரு...’ என்று மனதில் எண்ணிக்கொண்ட மீனாட்சியோ அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.

“அட எடுபட்ட பயலே இப்படித்தான் பேசிட்டு திரியிறியா நீயி.. வீட்டுக்கு வா உனக்கு இருக்கு...” என்று அவன் முகவாயில் ஒரு இடி இடித்தார் ஸ்ரேயா பாட்டி.

மற்ற மூவரும் கிளுக்கி சிரிக்க, கௌரவோ மீனாட்சியை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் தான் பார்த்து வைத்தான்.

“இந்தாடி அம்மாளு இனிமேலாச்சும் பொட்ட புள்ளையா நடத்துக்க. அந்த டவுசரையும் நாளு பேரு உள்ள போற அளவுக்கு சட்டையையும் விட்டுப்போட்டு அழகா அடக்க ஒடுக்கமா சாரிய கட்டு. தங்கமான மகராசன் தான் உன்ன தேடி வந்திருக்கான். பேரன் மனசு கோணாம நடந்துக்க..” என்றவர் இரண்டடுக்கு தங்க சங்கிலி ஒன்றை அவள் கழுத்தில் போட்டுவிட்டார்.

“என்ன கெழவி பாரம் குறைவா இருக்கு. தங்கம் தானே? உன்ன நம்ப முடியாது.. கல்யாணம் முடியட்டும் முதல் வேலையா இதைத்தான் நகக்கடையில் குடுத்து செக் பண்ணனும்..” என்று பேசிக்கொண்டே அவர் காலில் விழுந்தாள்.

“நல்லா இருடி.. பதினாறும் பெற்று தீர்க்க சுமங்கலியா.. நூறு வருஷம் நல்லா வாழுவ...” என்று மனதார வாழ்த்தினார் அந்த பெரிய மனுஷி.

ஸ்ருதியோ, “பதினாறா? தாங்குமா? ஏன் ஸ்ரேயா இந்த டிஸ்கவுண்ட் எல்லாம் இல்லையா? எனக்கு ப்ளஸ் பண்ணும் போது ஒரு ரெண்டு போதும்.. அப்படியே ரெண்டும் பெற்று பெறுவாழ்வு வாழ்கனு தான் வாழ்த்தனும் ஓகே..”

“ம்ம்ம்.. வந்துட்டா பேச்சுலயே ஏரோப்பிளேனு ஓட்ட.. கல்யாணத்தை பண்ணி வீட்டுக்கு வாடினா அதுக்கு மட்டும் முடியாது உனக்கு. கிழவி ஒத்தையில கெடகாளே போய் கூட இருப்போம்னு தோணுதா உனக்கு? இது சரிவராது. உங்கப்பாவ பாக்க நாளைக்கே வரணும்.”

“நோ அப்ஜெக்ஷன் ஸ்ரேயா தாராளமா வா... நாங்களே பண்ணிக்கலாம்னு ஐடியாக்கு வந்துட்டோம்.. ஷாப் ஓபன் பண்ணனும்னு தான் வெயிட் பண்ணோம் இப்போ அதுவும் நிறைவேறிடிச்சே இனி டும் டும் தான்..” என்ற ஸ்ருதி கௌரவை பார்க்க அவனோ புன்னகையுடன் நின்றிருந்தான்...

“மீனு.. உன்ன போலவே மகிக்கும் குட்டி சாரி...” என்று கத்தியபடி புடவையில் நடக்க முடியாமல் நடந்து வந்த மகியை கைகளில் அள்ளிக்கொண்ட விக்ரம் “ஒய் பியூட்டி மாமன கட்டிக்கிறியாடி?” என்றான் அவள் குண்டு கன்னத்தில் முத்தம் பதித்து..

உடனேயே கன்னத்தை துடைத்து கொண்டவளோ, “விக்கிறோம் வாங்குறோம்னு பேர் வெச்ச உன்ன எல்லாம் கட்டிக்க மாட்டேன் போடா.. நான் அர்ஜுன்னு பேர் இருந்தா தான் கட்டிக்குவேன்.”

“சேத்துலயும் அடிவாங்கியாச்சு சோத்திலயும் அடிவாங்கியாச்சு...” என்றாள் ஸ்ருதி சரியாக நேரம் பார்த்து...

அந்த நேரம் கோவிலுக்கு வந்த இரு பெண்மணிகள் இவர்கள் இருந்த இடத்துக்கு பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

“உனக்கு விஷயம் தெரியுமாடி.. இந்த மாப்பிள்ளைய தான் ஏற்கனவே மீனாட்சி கட்டினாளாம். அப்பறம் அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி எல்லாம் மறந்து போச்சாம்.. இப்போ தான் எல்லாம் ஞாபகம் வரவும் மீனாட்சியையும் குழந்தையையும் தேடி வந்திருக்காராம்..”

“பாரேன் நல்ல மனுசன்.. நல்லவங்கள தான் கடவுள் சோதிப்பாரு.. வா நம்ம வனஜாகிட்ட இதபத்தி சொல்லுவோம்...” என்று அப்பெண்கள் இருவரும் அங்கிருந்து செல்ல, மீனாட்சியோ தலையில் கைவைத்து அங்கேயே அமந்துவிட்டாள்.

“என்ன மச்சான் இதல்லாம்..” என்று கேட்ட ஸ்ருதிக்கோ சிரிப்பு, மீனுதான் நேற்றிருந்து வேந்தனின் அழுச்சாட்டியங்களை ஒன்று விடாமல் சொல்லி இருந்தாளே.

“எல்லாம் அந்த சிவனாண்டியே கிளப்பி விட்டதா இருக்கும் மாப்பிள்ளை...” என்றாள் மீனாட்சி திரைப்பட பாணியில்.

“இருந்தாலும் உன் ஆளுக்கு இவ்வளவு கற்பனை திறமை இருக்க கூடாதுடி.. உலக வாயாடி உன்னையே வாயடைக்க வெச்ச திறமை பாரி அண்ணனையே சாரும்.. அதுக்கு கண்டிப்பா பாராட்டு விழா நடத்தியே ஆகணும்.. ஆன்...” என்று ஸ்ருதியும் இறுதியில் அதே பாணியில் முடித்திருந்தாள்.

புரியாமல் என்னவென்று வினவிய நண்பர்கள் இருவருக்கும் ஸ்ருதியே விளக்கமும் சொல்ல கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது...
______________________________________________________________________________________________

ஆசிரமத்தை விட்டு வந்த வேந்தன் தனியாளாய் தான் இத்தனை நாட்களையும் கடத்தினான். இன்றோ நண்பர்கள் உறவினர்கள் என்று மட்டும் அழைத்திருக்க, அழையா விருந்தாளியாக குமரேசனின் குடும்பத்துக்காகவே அந்த ஏரியாவே திரண்டு வந்திருந்தனர்.

யாருக்கு எப்படியோ வேந்தனுக்கு கொண்டாட்டம்தான்.. ஒருத்தர் விடாமல் எல்லோரிடமும் வாயாடிகொண்டிருந்தான். அதிலும் ஸ்ரேயா பாட்டியை அத்தனை பிடித்தது அவனுக்கு. அவர் பேச்சில் தெரிந்த பேரன் என்ற உரிமையில் இவனும் சட்டென்று ஒட்டிக்கொண்டான்.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கதை என காலையிலிருந்து அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. விருப்பதுக்கு கற்பனையில் விளையாடி இருந்தான்.

பாவம் மீனாட்சிதான் கலைத்துவிட்டாள்... ஆளாளுக்கு வந்து “அப்படியாமே..” இப்படியாமே..” என்று விசாரித்துவிட்டு போக, தலையாட்டுவதை தவிர என்ன தான் செய்வாள் அவளும்.

இதோ மணமேடையில் அந்த எரியும் அக்கினியின் முன் அமர்ந்திருந்தான் வேந்தன்... பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமான தோற்றதில் தான் இருந்தான்... வந்திருந்த இளம் பெண்களின் பார்வை கூட ஆர்வமாய் தான் அவன் மீது படிந்தது.

இதோ மீனாட்சியும் அழைத்து வரப்படிருந்தாள். இளம் சிவப்பு நிற புடவையில் சாதாரண அலங்காரத்துடன் பேரழகியாகவே நடந்து வந்தாள் மீனாட்சி.

வேந்தனின் பார்வை அவளையே மெச்சுதலாக மொய்த்தது. ’இன்னைக்குனு என் கண்ணுக்கு இந்த ஆர்வகோளாறு ரொம்ப அழகா தெரியுறாளே.’ என்று ஒரு முறை எண்ணியும் கொண்டான்.

நேரே வந்தவள் தாய் தந்தை இருவரின் காலில் விழுந்து எழ, வைதேகி ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். காலையிலிருந்து மீனாட்சியை புடவையில் பார்க்கும் போதெல்லாம் அவர் மூத்தமகள் எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை அவரால்.

“நல்லா இருடா... அப்படியே மஞ்சு மாதிரியே இருக்கடா” என்றவர் கண்கலங்க..

“என்ன வைதேகி நல்லநாள் அதுவுமா இப்படியா அழுவ.. குழந்தையும் அழுறா பாரு...” என்று மனைவியை கடிந்துகொண்டவர், மகளின் தலையில் கை வைத்து, “எப்பவும் சந்தோசமா இருக்கணும் மீனுமா..” என்றவருக்கும் அடுத்த வார்த்தை வரவில்லை.

மீனாட்சி இருவரையும் அணைத்துக்கொண்டவள் அப்படியே இருக்க,

குமரேசன், “நேரமாகுது பாரு மேடைக்கு போடா...” என்க, தந்தையின் குரலுக்கினங்க மேடையில் சென்று அமர்ந்தாள் மீனு. ஆளுக்கொரு பக்கமாக இரு குழந்தைகளும் நின்றிருந்தனர்.

அத்தனை பேரின் ஆசிகளுக்கு நடுவே வேந்தன் முழுமனதுடன் மீனாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கி கொண்டான்.

“என்ன மிஸ்டர் வேந்தன் ரெடியா?” என்றான் அவளுக்கு மட்டும் கேக்கும் குரலில்.

“என்ன ரெடியா?”

“இல்ல இப்போ நான் மிஸ்டர் மீனாட்சி ஆகிடேன்ல.. இப்போ அக்கினி சுத்த சொல்லுவாங்க. நான் நடந்து சுத்துனா உன் லட்சியம் என்னாகிறது. அதான் என்ன தூக்கிக்க ரெடியானு கேட்டேன்.” என்றவன் அவள் தலையில் இடியை இறக்கி இருந்தான். இத்தனைக்கும் அவன் முகத்தில் அத்தனை தீவிரம்.

அவளோ அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்த்து, “என்ன விளையாடுறீங்களா?”

“யாரு விளையாடுனா? ஐ எம் சீரியஸ்… நீ சொன்ன வாக்குறுதிய நம்பித்தான் உன்ன கட்டி இருக்கேன்... என்ன ஏமாத்த பாக்கறியா? அந்த கடிதம் இன்னும் என் கிட்ட தான் இருக்கு.. நாம வேணும்னா அத காட்டி நியாயமா கேப்போமா? ஸ்ரேயா பியூட்டி கிட்ட கேப்போமா?” என்றவன் அவரை அருகில் அழைக்க போக...

’சோலி முடிஞ்சிது...’ என்று எண்ணி, அவன் கையை பற்றி தடுத்தவள், “இல்ல இல்ல வேண்டாம் தூக்கிக்கிறேன்.. தூக்கிக்கிறேன்...” என்றாள்.

அவனோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்த அடுத்த பக்கம் திரும்பி மகியை கொஞ்ச தொடங்கிவிட்டான்...

அவர்களது நெருக்கத்தை பார்த்த திவ்யாவுக்கு நெருப்பே இல்லாமல் உள்ளே புகைந்தது. இருந்தும் அமைதியாக நிற்க வேண்டிய கட்டாயம். சரஸ்வதி சொல்லியே அழைத்து வந்திருந்தார். ஒன்றும் செய்யமுடியாத அவள் நிலை அவளுக்கே எரிச்சலைதான் கொடுத்தது.

அந்த நேரம் ஐயரோ அக்கினி வளம் வரச்சொல்ல மீனாட்சிக்கு வயிரெல்லாம் பிசைய தொடங்கியது. வேந்தன் கண்ணால் சைகை வேறு காட்டினான் தூக்க வேண்டும் என்பதை போல.

’மீனு இப்படியாடி மாட்டணும் நீ.. ஐயோ என்ன உயரமா இருக்காரு இவர எப்படி தூக்குறது... ஒன்னா ரெண்டா ஏழு தடவ சுத்தணுமே.. அவன் அவன் என்ன என்னலாமோ செய்யிறான்.. ஆர்வக்கோளாறுல எழுதுன ஒரு கடிதம் என்ன வெச்சு செய்யுதே...’

ஸ்ரேயா பாட்டிதான் “என்னடி அம்மாளு அப்படியே உக்காந்திருக்கவ எழும்பி சுத்துடி...”

எழுந்து கொண்டவளோ கண்களால் அவனை அழைத்தவள்.. அவன் அவளருகே குனிந்ததும்.. “ப்ளீஸ்ங்க நான் எப்படி உங்கள தூக்குறது... நீங்க வேற மலமாடு கணக்கா இருக்கீங்க..” என்று இருந்த பதற்றதில் மனதில் எண்ணியதை அப்படியே சொல்லியும் இருந்தாள். அவன் முறைக்கவும் தான் சொன்னது புரிந்தது அவளுக்கு.

“அச்சச்சோ ஒரு டென்ஷன்ல உண்மைய உளறிட்டேங்க..” என்று மீண்டும் உளறி அவனிடம் மாட்டிக்கொண்டாள்.

அங்கிருந்தவர்கள் பார்வை மொத்தமும் அவர்களிடம் தான். இன்றைய நாளின் கதாநாயகர்கள் அவர்கள் அல்லவா.. வேறு எங்கு பார்க்க..

ஸ்ரேயா பாட்டிதான் ஆரம்பித்தார்.. “பேராண்டி என்னவாம் அம்மாளுக்கு.. என்ன சொல்லுறா?”

சும்மாவே அவன் ஆடுவான் இவள் சலங்கை வேறு கட்டி விட்டிருக்க தரையில் நிற்பானா என்ன?

“பியூட்டி அவ கையால தூக்கிட்டு தான் அக்கினிய சுத்துவாளாம்?” என்று சொல்ல மீனாட்சிக்கோ மயக்கம் வராத குறை தான்...

கூட்டத்தில் சலலசலப்பு.. பெண்கள் கிண்டல் வேறு பண்ணி கொண்டிருந்தனர்...

“என்னடி இது புது கூத்தா இருக்கு...” என்றார் ஒருவர்

இன்னொருவரோ “நம்ம மீனாக்குள்ளயும் இம்புட்டு லவ்வ வெச்சிட்டு தான் பையன சுத்த விட்டுருக்கா?”

இப்படி ஆளுக்காள் பேச, வேந்தனோ “நோ அப்ஜெக்ஷன் தூக்கிக்கோ மீனு..” என்றானே பாக்கலாம்.

அவள் அப்படியே நின்றிருக்க அவனே மீண்டும் “ஆருவ தூக்கிக்கோ மீனாட்சி. நான் மகிய தூக்கிக்கிறேன்.” என்றான் திருத்தமாக.

“அட குழந்தைங்கள கேட்டாளா? வாய திறந்து சொல்றதுக்கு என்னடி. அப்படியே நிக்கிற தூக்கிக்கோ.” என்றார் வைதேகி மகளை அவசரப்படுத்தியபடி.

முன்னாள் நடந்த வேந்தனோ இதழ் மடக்கி சிரிப்பை அடக்க, மீனாட்சியின் முறைப்பை பார்க்காமலே உணர்ந்து கொண்டவனுக்கு உண்மைக்கும் ஒரு உல்லாச மனநிலை தான்.

அப்படியே நேரம் கடக்க திருமணத்துக்கு வந்தவர்களுக்கு உணவு மீனாட்சியின் வீட்டிலும் கௌரவின் வீட்டிலும்தான் ஏற்பாடு செய்யப்படிருந்தது. நடந்து செல்லும் தூரம்தான் என்பதால்.. வந்தவர்கள் அங்கே அவர்களாகவே வர சாப்பாடு சைவம், அசைவம் என கலைகட்டியது.

இப்படியே நேரம் செல்ல. சிலர் தம்பதிகளுக்கு பரிசும் கொடுத்துச்சென்றனர். சரஸ்வதி இருவருக்கும் மோதிரம் வழங்கி இருந்தார்.

விஜய் கொண்டு வந்த பரிசை மீனாட்சியிடம் “உனக்காக ரொம்ப தேடி வாங்கினது மீனு...” என்ற வசனத்துடன் சேர்த்தே கொடுத்தான்.

வேந்தனுக்கு மட்டும் கண்ணால் எரிக்கும் திறமை இருந்திருந்தால் விஜயின் சாம்பல் மிஞ்சி இருக்குமா என்பது சந்தேகம் தான். அப்படி ஒரு முறைப்பு. கூடவே ’என் பொண்டாட்டிக்கு தேடி வாங்க இவன் யாரு?’ என்ற உரிமை போராட்டமும் இணைந்து கொண்டது.
______________________________________________________________________________________________

நேரம் நள்ளிரவு இரண்டையும் தாண்டியிருந்தது. அங்கே ஒருவனோ மது குவளையை கையில் எந்தியப்படி முன்னிருந்த படத்திலே கண்களை நிலைக்க விட்டிருந்தான்.

முன்னே மீனாட்சி புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து முகம் கொள்ளா புன்னகையுடன் வீற்றிருக்கும் படம் அது.

“உன்ன கைவிட்டது போல இன்னைக்கு இவளையும் விட்டுட்டேன்... ஆஆஆஆ... என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தியவன் , “விடமாட்டேன் விடமாட்டேன்... இவ எனக்குதான்... உன்ன கொன்னது போல இவள கொல்லமாட்டேன்.. கூடவே வெச்சுப்பேன்... ஆச தீர அனுபவிக்கனும்.... அனுபவிக்கனும்.. ம்ம்ம் அனுபவிக்கனும்...” என்றவன் சொன்னதையே திருப்பி சொல்லி கொண்டிருந்தான்.

“வரதா இன்னைக்கு ரொம்ப அதிகமாகிடுச்சு.. போதும்...” என்றார் நடுத்தர வயதான ஒருத்தர்.

“நோநோஓஓஓஓ... எல்லாம் உன்னாலதான் எல்லாம் உன்னாலதான்....” என்றவன் அவ்விடத்திலேயே மயங்கி சரிய, தாங்கி பிடித்தவர் அவனது தந்தை...

மகனின் நிலையை பார்த்தவருக்கு கவலைதான்... ஆனால் இவன் இத்தனை கொடூர மிருகமாக மாறி நிற்க, அவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் ஆயிரம் இருந்தும் மகனாயிற்றே பெற்ற பாசம் அவர் கண்ணை மறைத்திருந்தது.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
4,814
Reaction score
2,184
Points
113
வாத்தி,

பாவம்யா அந்தப் பொண்ணு. இப்படியா வம்பு பண்ணி பயமுறுத்துவது?

அதாருடா புதுசு ஒரு தண்ணி பார்ட்டி

இவன் தான் மகிழ் குட்டியின் அப்பனா? மீனுவை விரும்பி இவள் அம்மாவை கட்டிக்கிட்டானா?
 
Top Bottom